Saturday, November 29, 2008

பூந்தளிரும்...பாலமித்ராவும்...அம்புலிமாமாவும்...ராணிகாமிக்சும் இப்போது வருவதில்லையா?

பூந்தளிரும்...பாலமித்ராவும்...அம்புலிமாமாவும்...ராணி காமிக்சும் இப்போது வருவதில்லையோ ? ரொம்ப நாள் ஆகிறது அதெல்லாம் வாசித்து!

முன்னெல்லாம் பாட்டி ஊருக்குப் போய்விட்டு திரும்பி வரும்போது மூன்று மணி நேரமாக பயணநேரம் வாட்டி எடுக்கும் .அதன் வெறுமையை தீர்க்க மேற்சொன்ன புத்தகங்களே எனக்கும் என் தங்கைக்கும் துணையாகிப் போன நாட்களின் சுகம் இன்றும் ஞாபகத்தில் இனிக்கிறது.

அதே புத்தகங்கள் இப்போது எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை?கிடைக்குமா...கிடைக்காதா என்றும் தெரியவில்லை...ஆனாலும் அது ஒரு காலம்!பொன்னான தருணங்கள் என்று கூட சொல்லிக் கொள்ளலாம் .என் மகளுக்காக அந்தப் புத்தகங்கள் இன்று கிடைக்குமா என்று தேடத் தோன்றுகிறது...?!அதுவே அவற்றின் வெற்றி.

பாலமித்ராவில் வரும் பட்டி விக்ரமாதித்தன் கதை...

பூந்தளிரில் வரும் கபீஷ் என்ற ஒரு குரங்குக் கதை...

சம்பக் என்ற முதலை ...

பெரும்பாலும் பறவைகளையோ...அல்லது விலங்குகளையோ மட்டுமே ஹீரோ ...ஹீரோயின்களாக தாங்கி வரும் இந்தக் கதைகள் படிக்க மிகச் சுவையானவை(அந்த வயதில் ...! சொன்னேன்).

ராணி காமிக்ஸில் வரும் "மாயாவி" தொடர் ..."ஜேம்ஸ்பாண்ட்" தொடர் இன்னும் நிறைய சொல்லாம் .

சிலது இப்போது மறந்து போயிருக்கலாம்;

அப்புறம் இருக்கவே இருக்கிறது நமது "சிறுவர்மலர்"சிறுவர்மலர் எப்போதடா வரும் என்று காத்திருந்து முதல் ஆளாய் படித்து முடிக்க எங்கள் வீட்டில் எப்போதும் எனக்கும்...என் தங்கைக்கும் சண்டை வரும் .

வெள்ளிக்கிழமை மட்டும் காலை ஐந்து மணிக்கே விளிப்புத் தட்டி விடும்...மாற்ற நாட்களெல்லாம் ஆறு ஆறரை ஏன் சமயத்தில் எழு கூட ஆகலாம் ஒன்பது மணி பள்ளிக்கு எழு மணிக்கு எழுந்தால் போதாதா என்ன? உள்ளூர் பள்ளி தானே என்ற சமாதானம் எல்லாம் வெள்ளியன்று மட்டும் கிடையாது ...!

சிறுவர்மலர் அட்டைப்படத்தைப் பார்த்து அதில் தாமரைப் பூவோ என்னவோ படம் இருக்கும் லோகோ போல அதைப் பார்த்தால் அப்போது அவ்வளவு சந்தோசம் வரும் ...

என் மகளுக்கு தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் ஏதாவது ஒரு நீதிக் கதை சொல்வதை இப்போதெல்லாம் வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்.

அது ஆமை முயல் கதையோ...

காகமும் ,நரியும் கதையோ...

நான்கு பசுக்கள் கதையோ...

புறா...எறும்புக் கதையோ...

இல்லாவிட்டால் புராணக் கதைகளோ ...கற்பனை விரவிய மாயாஜாலக் கதைகளோ ...எதுவோ ஒன்று ஒவ்வொரு இரவும் தூங்கப் போகும் முன் கட்டாயமாக்கி இருக்கிறேன் ...;

அவளுடைய கற்பனை வளத்தை வளர்க்கவோ...பல்முனை அறிவைத் தூண்டவோ எதுக்காக என்றெல்லாம் என்னையே நான் கேள்வி எதுவும் கேட்டுக் கொள்ளாமல் தினம் தினம் ஒரு கதை சொல்லிக் கொண்டு இருக்கிறேன் .இப்போது நான் மறந்தாலும் அவள் விடுவதில்லை ...இன்னைக்கு என்ன ஸ்டோரிம்மா? என்கிறாள் மறக்காமல் .இது தான் நான் எதிர்பார்த்தது .அதுவரை சந்தோசமாய் உணர்கிறேன்.

இப்போதைய குழந்தைகளுக்கு புத்தகங்களுக்கு பஞ்சம் இல்லை தான் ...!!!சந்தையில் கிடைக்காத புத்தகங்களா என்ன? பணம் தான் வேண்டும் கைக் கொள்ளாமல் புத்தகங்களை அள்ளிக் கொள்ளலாம்,அதென்னவோ என்ன இருந்தாலும் அந்தக் காலம் போல வருமா ?என்ற எண்ணம் மட்டும் போக மாட்டேன் என்கிறது .

எனக்குத்தான் முதலில்...இல்லை எனக்கு தான் முதலில் என்று வீட்டில் நாலைந்து பேரோடு சண்டை போட்டு ...போட்டியில் வென்று படிக்கும் சுகமே அலாதி தானே!!!இன்றைய குழந்தைகள் ஆளுக்கு ஒன்றல்லவா(எதுவானாலும் அவரவர்க்கென்று தனித் தனியாக) கேட்கின்றன!!!

எது எப்படியோ ?எனக்குத் தெரிந்தவரை கதைகளை வாசித்துக் காட்டியோ அல்லது கற்பனையாக பொருத்தமானவற்றை இட்டுக் கட்டிச் சொல்லியோ எப்படியோ ஒரு வகையில் என் குழந்தையின் சிந்திக்கும் திறனை அதிகரிக்க வேண்டுமென்று உணர்ந்ததால் இதையெல்லாம் செய்து வருகிறேன் .

இன்றைய டவுட் :-

பூந்தளிர்

பாலமித்ரா

அம்புலி மாமா

கோகுலம்

ராணி காமிக்ஸ்

இந்தப் புத்தகங்கள் எல்லாம் இப்போதும் வருகின்றனவா ?எங்கே இந்தப் புத்தகங்கள் கிடைக்கும் என்று தெரிந்த வலைப் பதிவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் கூறுங்கள்.

Wednesday, November 26, 2008

டாய்லட்டில் குளித்த தங்க டாலர்...!!!

சட்டென்று மூச்சடைத்ததைப் போல ஆயிற்று...

திக்...திக் என்று நெஞ்சு அடித்துக் கொண்டது !

சும்மாவா?

இப்போது என்ன செய்யலாம் ?

திடு திப்பென்று யோசிக்கக் கூட முடியாததைப் போல ஒரு சில நொடிகள் மூளை ஸ்தம்பித்துப் போனது.

மயக்கம் வருவதைப் போலக் கூட இருந்தது .

வெளியே ஹாலில் அப்பா யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டே அலுவலகத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அம்மாவின் சத்தத்தைக் காணோம்...ஒரு வேலை சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம் !

இருவரும் இன்னும் பத்துப் பதினைந்து வினாடிகளில் பறந்து விடுவார்கள் அவரவர் வேலைக்காக ?!பிறகு மாலை மங்கிய பின்தான் கூடடைவது வழக்கம்.

அது தினம் தினம் நடப்பது தானே!அதைப் பற்றி இப்போது என்ன?

என் கஷ்டம் எனக்கு சீக்கிரமாக யோசித்து ஏதாவது செய்தே ஆக வேண்டும் உடனே...ஆமாம் ...உடனே!!!

கொஞ்சம் கூட நேரமே இல்லை .

ஊரிலிருந்து பாட்டி வேறு இன்றைக்குப் பார்த்தா இங்கு வரவேண்டும்?

நல்ல வேலை இப்போது இங்கே இல்லை ....சித்தப்பா வீடு வரை போயிருக்கிறாள்...பாட்டி வருவதற்கு முன் ஏதாவது செய்து என் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும்...வேறு வழியே இல்லை !

இன்றைக்கு காலையில் அலாரம் வைத்து எழும்போது கூட இப்படி எல்லாம் எனக்கு நடக்கும் என்று நான் நினைத்துக் கூடபபார்க்கவில்லை .

கார்த்தி ....கார்த்தி அப்பா தான் ...புறப்பட்டு விட்டார்கள் போல் இருக்கிறதே?அடக் கடவுளே!!!உடனே ...உடனே ஏதாவது செய்ய வேண்டுமே ?!

அம்மாவின் குரல் ...

இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க உள்ள?

வெளிய வா ...நான் பாத்ரூம் போகணும்அடராமா இதென்ன புது தலைவலி!!!உட்கார்ந்த நிலையில் தான் இருந்தேன்;

இன்னும் டாய்லட் பீங்கானின் மேல் உட்கார்ந்தவாறு தான் இத்தனையும் இவ்வளவு நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன் .

அம்மா மறுபடி ஒருமுறை கொஞ்சம் பலமாகக் கதவைத் தட்டினார்.

இனி வேறு வழியே இல்லை ."இன்னும் உள்ளே போய் இருக்க கூடாது முருகா " என்று வேண்டிக் கொண்டு எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டு இடது கையை உள்ளே விட்டு தேடினேன் பீங்கானின் வழவழப்பு அருவருப்பாகத் தான் இருக்கும் என்ன செய்ய?

பொறுத்துக் கொண்டு இன்னும்...கொஞ்சம் உள்ளே...உள்ளே விட்டு கைக்குத் தட்டுப் பட்டு விட வேண்டும் என் அப்பனே முருகா என்று விடாமல் முணுமுணுத்தவாறு மனதை ஒருமுகப் படுத்தி விரல்களால் உள்ளே அலசினேன்

கவனமாக...மிக...மிகக் கவனமாக மெல்ல விரல்களால் அளந்தேன் .சுண்டு விரலில் தான் முதலில் தட்டுப் பட்டது கொக்கி ;

இதற்குள் அப்பா...அம்மா இருவரும் சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள் வெளியில்;

அவர்கள் அவசரம் அவர்களுக்கு !!!

எப்படித் தெரியும் என் அவஸ்தை அவர்களுக்கு ?

டாய்லட் பீங்கானில் அமர்ந்த முதல் நொடி வரை எனக்கே தெரியாதே!எப்படியோ சுண்டு விரலில் இடித்தது இனி ஆட்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவில் வந்து விடாதா என்ன ? என்று தான் நான் விடாது முனைந்து கொண்டிருந்தேன் .

பாட்டியின் குரல் வேறு இப்போ கதவுக்குப் பின்னால் கேட்கிறதே...!

வந்து விடும் போல் இருக்கிறதே...நாடு விரலில் டாலரின் கீழ் முனை நழுவியது .

இன்னும் முயற்சிக்கலாம் ...கட்டாயம் கைக்கு சிக்கும் பெரும் முனைப்போடு இன்னும் விரல்களை விட்டு பொறுமையாக அலைந்தேன்...

அதற்குள் வெளியே அப்பாவின் குரல் உச்சஸ்தாயி அடைந்திருந்தது .

பாட்டி வேறு கூட சேர்ந்து விட்டது உள்ளிருந்தே அனுமானிக்க முடிந்தது டாலர் மட்டும் கைக்கு சிக்கட்டும் வெளியில் போய் வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை !

பிள்ளையாரப்பா ...எங்கம்மா ஸ்கூலுக்கு லேட் ஆகுது சீக்கிரம் ஹெல்ப் பண்ணேன் ..ப்ளீஸ் ...!

ஒருவழியாய் கொக்கி வசமாக கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்கும் நடுவில் வந்து மாட்டியது .

சரட்டென்று வெளியில் இழுத்தேன் இடது கையை அத்தனை மலத்தோடும்...!!!வேறென்ன இருக்கும் டாய்லட் பீங்கான் கோப்பைக்குள்?

மடமடவென்று சுத்தம் பார்க்காமல் கைகளைக் கழுவினேன் ...

அம்மா கத்த..

.அப்பா கத்த...

பாட்டி கத்த...

ஒருவழியாய் நிதானமாய் சோப்பெல்லாம் போட்டுக் கழுவி டாலர் நாறுகிறதா என்று சோதித்து பிறகு கடைசியில் கதவைத் திறந்தேன் .மூவர் கூட்டணி என் மீது விட்டால் பாய்ந்து விட்டிருப்பார்கள்

பெரிய சாகஷியைப் போல ஒரு லுக் விட்டேன் நான் ...அதான் டாலர் கிடைத்து விட்டதே ...!!!கடுகடுவென்று என் அசமந்தத்தை சாடிக் கொண்டே உள்ளே நுழையப் போன அம்மாவிடம் திக்காமல் திணறாமல் நடந்ததைச் சொன்னேன்.

கடுவன் பூனைகளாய் மாறிப் போன மூவரும் குபீரென்று சிரித்து விட்டார்கள் .

டாலர் கிடைக்காமல் உள்ளே போயிருந்தால் இப்படியெல்லாம் சிரிப்பார்களா என்ன?

எல்லாம் டாலர் கிடைத்த மாயம்.

தங்கமய்யா தங்கம்!!!முக்கால் சவரன் தங்கத்தில் அழகான இதயம் வடிவ தங்க டாலர் ஆச்சுதே!!!

ஆள் மாற்றி ஆள் பாத்ரூம் போயிருந்தால் டாலர் இந்நேரம் செப்டிக் டாங்கில் அல்லவா கேட்பாரற்றுக் கிடக்கும் ...முக்கால் சவரன் !!!மூக்கால் அழுவார் அப்பா ...அம்மா கூடத் தான் ...ஏன் நானும் தான் !ஒரு வழியாய் கையில் சிக்கி விட்டது .

Sunday, November 23, 2008

இது ஒரு சோதனைப் பதிவு மட்டுமே!!!

இது ஒரு சோதனைப் பதிவு மட்டுமே!!!

மறத்தல்

மறத்தல்

நன்றே!

மறந்து போனது போல

நடிப்பதைக்

காட்டிலும்

மறத்தல்

நன்றே !

பழகிய தெரு

படித்த பள்ளி...கல்லூரி

முன்னாள் காதலி

மூடி வைத்த நேசம்

எல்லாம் எல்லாமே

மறத்தல் நன்றே !!!

Saturday, November 22, 2008

தேடுதல்

மெத்தை விரிப்பின் ஓரங்களில்
தேடினேன்
கிடைக்கவேயில்லை
என் மனம் தேடிய வார்த்தைகள் !
மனச் சுருக்கங்களை
நீவிய பின் கிடைத்த
கசங்கிய வரிகளில் கூடத்
தேடினேன்
தென்படவே இல்லை
என் மனம் தேடிய வார்த்தைகள் !
ஏழு கடல்
ஏழு மலை
ஏழு குகை
எல்லாம் ...எல்லாம்
குடைந்து...குடைந்து தேடியும்
கிடைக்கவே இல்லை
என் மனம் தேடிய வார்த்தைகள் !
என் குழந்தையின்
ஒற்றை முத்தம்
இன்றெனக்குகுறிப்பால்
உணர்த்தியது
என் மனம் அவளிடத்தில்
மட்டுமே தேடாது
ஒழித்திட்ட அந்த வார்த்தைகளை !!!
இருக்குமிடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
அலைவதே
மனித நாகரீகமோ?
மனதின் நாகரீகமோ?
ஆக மொத்தம்
நாகரீகத்தில் ஒட்டிக்கொண்டு
நரக வாழ்க்கை வாழ்கிறோம் போல !!!