Wednesday, December 17, 2008

அரை ஆழாக்கு நைஸ் புழுதி...

ஆடி மாதமே காற்றாடிக் காலம் முடிந்து விடவில்லை,இன்னும் ...இப்போதும் தொடர்கிறது என்பதை ஜன்னல் திறந்திருப்பின் நடு வீட்டுக்குள் வாரி வீசும் புழுதிக் காற்றை வைத்தே தீர்மானிக்கலாம்.இயல்பில் ஆடி மாசம் தான் காற்றுக் காலம்!
"ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும்" இந்தப் பழமொழியே சாட்சி ;
"புரட்டாசியும் ஐப்பசியும்" அடைமழைக் காலங்கள் தான்,
"மார்கழி" குளிர் காலம்,கூதிர் காலம் பனிக் காலம் இப்படி எப்படி சொன்னாலும் மார்கழி குளிர் தானே மனசில் நிற்கும்.
பருவ நிலை மாற்றமோ என்னவோ? ஆடி மாதத்தில் எல்லாம் இப்போது காற்று கம்மியாகி விட்டதைப் போலொரு பிரமை?! ஆடியை விட மார்கழி தொடக்கம் முதலே அள்ளி அள்ளி வீசுகிறது காற்று (குப்பை...கூலம்...புழுதி வித்யாசமெல்லாம் வாடைக் காற்றுக்கு இல்லை போலும்!).
காற்றாடி (பட்டம் என்றும் சொல்லலாம்!) விடும் பையன்கள் மொட்டை மாடிக்குப் போகவே வேண்டாம்...முச்சந்தியில் நின்று கொண்டு தாராளமாக விடலாம்.பிய்த்துக் கொண்டு பறக்கும் காற்றாடி நூலோடு!அது பறந்து போய் யார் கழுத்தைச் சுற்றினால் தான் காற்றுக்கு என்ன வந்தது? கன ஜோராக வீசிக்கொண்டு இருக்கும் அது பாட்டுக்கு மார்கழி ,தை என்று விவஸ்தை எதுவுமின்றி!
இந்த மார்கழியில் தானா அரைப் பரீட்சை வைத்து லீவு விடுவது? இந்தப் பள்ளிக்கூட வாத்தியார்களுக்கு கொஞ்சமேனும் பெற்றோரின் கஷ்ட நஷ்டம் புரிவதே இல்லை எந்தக் காலத்திலும் ...அவர்கள் பாட்டுக்கு பரீட்சை என்று ஒன்றை வைத்து வருசத்துக்கு மூன்று தடவையாச்சும் லீவு விட்டு விடுகிறார்கள்?!
என்னாத்திற்கு இந்த லீவு என்கிறார்கள் பெற்றோர்கள்? பிள்ளைகள் வருஷம் முழுக்க நன்றாய் படிக்கட்டுமே! அதில் என்ன குடி முழுகி விடும்? இது சாத்தியமே இல்லை என்பது தெரியும் ."வாண்டுகளா ...வானரங்களா"...என்று சந்தேகம் வரவைப்பதைப் போல சில பிள்ளைகள் சேஷ்டைகள் செய்வதால் எல்லாப் பிள்ளைகளுக்கும் லீவு விட்டு விடுவதாக எங்கள் வீட்டு வாண்டு ஒருமுறை சொல்லியதுண்டு!!!
லீவு விடும் பழக்கத்தை யாராலும் மாற்றவே முடியாது தான் .குறைந்த பட்சம் இந்தக் காற்றுக் காலாத்திலாவது லீவேவிடக்கூடாது...ஐயோடா...இந்தக் குட்டி குறுமாணிகள் எல்லாம் தெருப் புழுதியில் தான் விழுந்து கும்மாலமடிக்கின்றன.உடம்புக்கு எது வேண்டுமானாலும் வந்து விடாதோ? சதா புழுதியில் புரண்டு ஆடினால்?
அட வீட்டிற்குள் அடைத்து வைக்கலாமென்றாலும் ஒரு பிரஜோஜனமும் இல்லை ?! தினப் படி ஐந்து முறை வீட்டை ஒழுங்கு பண்ணி கூட்டிப் பெருக்கி கழுவினாலும் தாராளமாய் ஒவ்வொரு தடவையும் அரை ஆழாக்கு நைஸ் புழுதி கிடைக்கிறது குப்பை வழித்தெடுக்கும்
பிளாஸ்டிக் முறத்தில்.
இந்த விஞ்சானிகள் எல்லாம் என்னெனவோ கண்டுபிடிக்கிறார்களே !...இந்த நைஸ் புழுதியை வைத்து ஆராய்ச்சி கீராய்ச்சி எதுவோ செய்து ஏதாவது கண்டு பிடித்தால் புண்ணியமாய் போகாதோ?
பாவம் காற்றுக்கு வாய் இருந்தால் அது கூட ஒரு பாட்டம் அழுது விட்டிருக்கும் புழுதியை அது வாரிக் கொண்டு வந்து வீட்டுக்குள்ளும் ...வீட்டடியிலும் போடப் போட நாமும் சளைக்காமல் கூட்டிப்பெருக்கி முறத்தில் அள்ளி அள்ளி அள்ளி மறுபடி தெருவிலேயே வீசுகிறோமே? இதைப் பார்த்துப் பார்த்து காணச் சகியாமல் அந்தக் காற்றும் கூட வாய் இருந்தால் கதறி அழக் கூடும் தான்!!!
கணவர்கள் தங்கள் மனைவிகளின் மேல் உள்ள கோபத்தை தீர்த்துக் கொள்ள தாராளமாக இந்த மாதத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நைஸாகப் பேசி பேசியே அவர்களை குறைந்த பட்சம் ஒரு வாரமேனும் அம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டு .துல்லியமாக அவர்கள் அம்மா வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு(மனைவிகளுக்கு புருஷன் வீடு புகுந்த வீடு தானே!!!) வரும் போது நீங்கள் ஆபிஸ் டூர் என்று ஓடியே போய் விடலாம் ?!
புழுதி அடைந்து போய் பாழடைந்த பங்களா எபெக்டில் இருக்கும் வீட்டை சுத்தம் செய்வது பெரிய தண்டனை தான் மனைவிகளைக் கேட்டுப் பார்க்கலாம் விவரம் தெரியாதவர்கள்.இந்த நைஸ் புழுதி இருக்கிறதே அது ஒரு சாபக் கேடு என்கிறார்கள் பெண்கள் எல்லோருமே ஒட்டுமொத்தமாக.
இதனால் என்னென்ன வரலாம் என்று ஒரு லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார்கள் அவர்கள்,
ஆஸ்த்துமா
வறட்டு இருமல்
தொடர் தும்மல்
மூச்சுத் திணறல்
மூக்கடைப்பு
அப்புறம்...அப்புறம்...
கண்ணீர் !!!(கண்ணில் புழுதி விழுந்தாலும் கண்ணீர் வரும் தானே?!)அழுகை !!!( எவ்வளவு பெருக்கினாலும் தீராத புழுதிப் படலம் தட்டுப் பட்டால் அழுகையும் வரும் தானே!?)
சண்டை !!!(நைஸ் புழுதி பெருக்கிப் பெருக்கியே ஆய்ந்து ஓய்ந்து போய் உட்கார நினைத்தால் அந்நேரம் கணவரோ...பிள்ளைகளோ ஏதாவது கேட்டால் கட்டாயம் சண்டை வரும் தானே?!)
ச்சே...ச்சே...இந்த மார்கழியில் இந்த நைஸ் புழுதியால் வந்த வினையைப் பாருங்கள் எவ்வளவு நீளமான கட்டுரை எழுத வேண்டியதாகிப் போச்சு !!!எல்லாம் புழுதி மயம்!!!
பாத்திரம்...பண்டம்...உடுப்புகள்...கட்டில்....பீரோ ... கண்ணாடி ...சுவர் ...தரை எங்கும் புழுதி மயம்.
எனக்கு ஒரே ஆயாசமாய் இருக்கிறதப்பா !
அப்போ உங்களுக்கு ?எப்படி இருக்கும் என்று எழுதுங்கள் பின்னூட்டத்தில் .

புரட்டாசி கோவிந்தாக்கள்,ஆடி ஆத்தாக்கள்,மற்றும் பிச்சைக் காரர்கள்

பெருந்தொல்லைகள்:-
வாழ்க்கையில் பெரிய..பெரிய தொல்லைகள் எல்லாம் எப்படி வந்து சேருகின்றன என்று பாருங்கள்.தொல்லை என்பதெல்லாம் வெறும் வார்த்தை ...அது பெரிய கொடுமை என்றும் சொல்லத் தகும்.

உங்கள் குடியிருப்பில் உங்கள் வீடே முதல் வீடா? பிடித்தது ஏழரைச் சனி !!!போஸ்ட் மேனில் இருந்து கறிகாய் விற்பவர் வரை ungal மண்டையில் தான் முதல் மணி அடிக்கக் கூடும் ! கூரியர் காரர்களையும் சும்மா சொல்லக் கூடாது . அடுத்த வீட்டில் ஆளில்லா விட்டால் உங்கள் வீட்டு காலிங் பெல்லே எல்லோருக்கும் இதம் தரும் இன்னிசை ஆகக் கூடும்.

புரட்டாசியில் "கோவிந்தாக்கள் சங்கப் பிரபலங்கள்

"ஆடியில் ..."ஆத்தாவுக்கு கூழ் ஊத்துவோர் சங்கக் கண்மணிகள்"

வீட்டுக்குப் பக்கத்தில் "பிள்ளையார்...அம்மன்...நாகாத்தம்மன்...முருகன்...இன்ன பிற தெய்வங்கள் குடியிருந்தால்...திருவிழாக் காலங்களில் உங்கள் பர்ஸ் கதறிக் கொண்டு தினம் அழலாம்.அப்படி ஒரு பெருங்க் (கொள்ளைக்) கூட்டம் முற்றுகை இடும் முதல் வீட்டில் முதல் முதலாய்.

பிச்சைக் காரர்கள் சங்கம் வைத்து கூட்டம் போட்டுத் தண்டிக்க நினைத்தால் முதலிடம் முதல் வீட்டுக் காரர்களுக்கே?!

"பாழாப் போன வீடு...நாசமாப் போக...கூச்ச ...நாச்சமே இல்ல எட்டி நின்னு எட்டணா போடறான் அந்த முத வீட்டுக் முட்டாக் கபோதி ..." திட்டுக்கள் தாராளமாய் விழலாம் என்றேனும் நீங்கள் அச்சங்க கூட்டத்தில் சிறப்பு விருந்தினராய் கலந்த கொள்ள வாய்ப்பிருப்பின்!!!

இது மட்டுமா?

விற்ப்பனை பிரதிநிதிகளின் வயிற்றெரிச்சல் வேறு?

"எப்போ போனாலும் லேசா தொறந்து எட்டிப் பார்த்துட்டு வேணாம் போன்னு வெரட்டுறான் அந்த வெங்கம் பய ..." இவனப் போயி எவன் குடி வச்சான் முத வீட்டுல? சனி முகத்துல முழிச்ச மாதிரி தான் ஒன்னும் போனியாகள இன்னைக்கும்"

இதெல்லாம் சும்மா சாம்பிளுக்கு தான் ...

அனுபவம் இருந்தா நீங்களும் கொட்டுங்க உங்க மான அவமானத்தை .

குறிப்பு:- முதல் வீட்டுக் குடித்தனக்காரராகவோ அல்லது அப்படிப் பட்ட அனுபவம் வாய்ந்தவராகவோ இருத்தல் அவசியம் .

பஸ் ஸ்டாண்ட் பெண்கள்

அவள் பெண்ணா இல்லை பேரழகியா ?
ஏதோ ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் பார்த்தேன் ஒருநாள்.அந்த நாளே முதல் நாள்!அவள் என்னைப் பார்த்தாளா இல்லையா என்பது இன்றும் எனக்குத் தெரியாது.
நான் அவளைப் பார்த்தேன் ...
நான் மட்டுமே அவளைப் பார்த்தேன் என்பதற்கில்லை...!
அந்தப் பேருந்து நிறுத்தத்தில் இருந்த இன்னும் சிலரும் கூட பார்க்கத்தான் செய்திருப்பார்கள் ?!
அதெல்லாம் சும்மா டைப் ஆசாமிகளாக இருக்கலாம்!
ஜாலி சைட் ஜல்லிகளாகவும் இருக்கலாம்!
என்னைப் போல அவள் ஒவ்வொரு அசைவையும் யாரேனும் பார்த்தார்களோ என்னவோ ?வாய்ப்பு இல்லை என்று தான் நினைக்கிறேன். அவளது கண்களை விட்டு என்னால் அகலவே முடியவில்லை.நான் அவளைத்தான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் என்பதை அவள் உணர்ந்தது போலவே தெரியவில்லை.
நீண்ட நேரமாக நின்று கொண்டே இருக்கிறாள் அவள்.நானும் தான்.அவள் ஏற வேண்டிய பேருந்து இன்னும் வரக் காணோம்.அப்போது நேரம் மாலை 4.30 pm .இன்னும் 2 மணி நேரம் போனாலும் பரவாயில்லை அவளை ஏற்றிச் செல்லும் பேருந்து மட்டும் வரக் கூடாது இப்போதைக்கு என்று நினைத்துக் கொண்டேன்.
நினைத்த மாத்திரத்தில் உடனே ஒரு பேருந்து வந்தது .
அதுவே அவள் செல்லும் பேருந்து .
ஒயிலாக ஏறிக் காணாமல் போனால் என் கண் கவர்ந்த பெண் மயிலாள் .
என்ன செய்வேன் நான்?
அடுத்த பேருந்துக்கு காத்திருந்தேன் என்று கற்ப்பனை செய்யாதீர்கள்!!!எனக்கும் செல்ல வேண்டிய பேருந்து வரவே நானும் அதில் ஏறிக் கடந்தேன் .
அவ்வளவு தான் .
நீங்கள் என்ன நினைத்துக் கொண்டீர்களோ...கொள்வீர்களோ....? நடந்தது இது தான் .
இது மட்டும் தான்!!!

Tuesday, December 16, 2008

உன்னோடு நானிருந்த பொழுதுகளில் எங்கே நான் தொலைந்தேனோ?

பள்ளி விட்ட

மாலை நேரம்

முதன் முதலாய்

புத்தம் புது தாவணியில்

சிட்டாக நீ பறக்க யத்தனிக்கையில்

செப்பனிட குவிக்கப் பட்ட

சரளைக் கற்களில்

இடரப் பட்ட உன் பாதங்கள்

தடுமாறி சரியும்போதா

இடம் மாறியது என் நெஞ்சம்?!

இன்னும் தெளிவில்லை ...!

எட்டி நின்று பெட்டிக்கடையில்

முறுக்கு வாங்கித் தின்கையிலே

விட்டு விட்டு அலறிய

உன் மென் குரலால்

சட்டென்று விழி நிறைத்தாய்

என் சிந்தையிலும் நீ நிறைந்தாய்...

பட்டு பூச்சியடி ...

நீ என் பாவை சந்திர பிம்பமடி !

அன்று நீ விழுந்திடாமல்

பாங்கோடு தாங்கி எழுப்பியவன்

அன்றே தான் விழுந்து விட்டேன்

உன் படபடக்கும் இமை நடுவில் ?!

எங்கே போனாலும்

உன் நினைவு துரத்துதடி

காணாமல் போனது போல்

வாழ மனம் முயலுதடி ...

என் கண்ணில் பாவையன்றோ ?

கண்ணம்மா எங்கும் உனைக் காண்பேனோ?

இன்னும் ஒரு பிறவி எடுப்பேனோ

ஏந்திழையே உனக்காக !?

எங்கே நான் தொலைந்தேன் ?

காதலில் உருகி வழியும் போதா ?

பெண் கேட்டு வந்த போதா ?

திருமணம் பேசி முடித்த போதா?

மூன்று முடிச்சு இட்ட போதா ?

ஊது பத்தி புகை மணக்க

கட்டில் சம்பங்கி மணம் நிறைக்க

கண்ணோடு கண் சேர்த்து

முயங்கும்போதா ...?!

எங்கே நான் தொலைந்தேன் ?

பிள்ளைக் கனியமுதாய்

பேசும் பொற்சித்திரமாய்

சின்னவளை மடியிலிட்டு

தாலாட்டுச் பாடிப் பாடி

என்னையும் தூங்க வைத்தாய் ...

அங்கே தான் தொலைந்தேனோ?

இன்னும் தெளியவில்லை

எங்கே தான் தொலைந்தேனோ?

அதென்ன உட்டாலக்கடி வேலை?

அதென்ன பாரபட்சம் ?
தமிழ்மணம் ஒரு திரட்டி .அதில் இடுகைகளை புதியவர்களும் இடுகிறோம்,பழைய பதிவர்களும் இடுகிறார்கள்.எப்போது பார்த்தாலும் ஒரு சில பதிவர்களின் இடுகைகள் மட்டுமே சூடான இடுகைகளிலும்...வாசகர் பரிந்துரைகளிலும் வருகிறது,இது எப்படி சாத்தியம்? அப்படி சூடான இடுகைகளில் வரும் பதிவுகள் தான் நல்ல பதிவுகளா என்ன? எந்த அடிப்படையில் சூடான இடுகைகள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன?அதிக பின்னூட்டங்கள் பெற்ற இடுகைகள் தான் சூடான இடுகைகளா?அப்படியானால் பதிவர்களே அனானி பின்னூட்டங்கள் இட்டுக் கொண்டும்...கருத்துக்கள் அற்ற வெறும் கண் துடைப்பு
( உதாரணம்:- மீ த பஸ்ட்...
டூ...
த்ரீ...
இன்பினிட்டி...
)என்று பின்னூட்டங்கள் இட்டுக் கொண்டால் அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் இங்கே வாசகர் பர்ந்துரை தேர்ந்தெடுக்கப் படுகிறதா?ஒரு சில பதிவுகளைத் தவிர பெரும்பாலான பதிவுகளும் சூடான இடுகை மற்றும் வாசகர் பரிந்துரைகளில் வருபவை எல்லாம் அப்படி கருத்து செறிவோ...விஷய ஞானமோ உள்ள பதிவுகளாகத் தெரியவில்லையே?! உண்மையில் பதிவுகள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப் படுகின்றன? இந்த லட்சணத்தில் விருதுகளை வேறு அறிவித்திருக்கிறீர்கள்!விருதுகள் எந்த அடிப்படையில் அளிக்கப் பட இருக்கின்றன என்பது குறித்தும் தெளிவான விளக்கம் எதுவும் இதுநாள் வரையிலும் இல்லை.யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு? யாருடைய இடுகை விரைவாக சூடாகிறதோ அவர்களுக்கு கொடுத்து விட்டுப் போவதற்க்கேன் அறிமுகப் பதிவர்களில் இருந்து சில மென் பதிவர்கள் (இவர்கள் யாரையும் திட்டியோ தனி மனித தாக்குதலிலோ ஈடுபடாதவர்கள்) வரை எல்லோரையும் ஏமாற்ற வேண்டும் ?ஐயா தமிழ் மன நிர்வாகிகளே...பழம் பெரும் ...முத்து பெரும் பதிவர்களே...உங்களுக்குத் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்கள் ...புதியவர்களது நல்ல ரசனையான பதிவுகள் பிரபலமாக என்ன தான் செய்து தொலைக்க வேண்டும் என்று??????????????????? இங்கே யோசித்து யோசித்து மண்டை காய்கிறது.ஏன் வெளிப்படையாகவே கேட்கிறேன்....உண்மையைச் சொல்லுங்கள்.
லக்கிலுக்
அதிஷா
கார்க்கி
தாமிரா...
பரிசல்காரன்...
இவர்களது பதிவுகள் மட்டும் தான் சூடாகுமா?
ஏன் இவை மட்டும் தான் ரசனை மிக்க பதிவுகளா?
ஏன் இவர்களை மட்டும் தூக்கி வைத்துக் கொண்டு தமிழ்மணத்தில் கொண்டாடுகிறார்கள்?
இவர்களது பதிவுகள் நன்றாக இருந்தாலும் ....இவர்களை விடவும் அர்த்தமுடன் சில பதிவர்கள் பதிவுகளை இட்டிருக்கின்றனரே !!!நான் ரசித்த அந்தப் பதிவுகளை ஏறக்குறைய எல்லோருமே ரசித்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்.உதாரணத்திற்கு ;
துளசிதளம்
சித்திரக்கூடம்
அபிஅப்பா
முரண்தொடை
இப்படிப் பல ....
ஏன் இவர்களது பதிவுகள் எல்லாம் சூடான இடுகைகளில் இல்லை ?யாராவது பதில் சொல்லுங்கப்பா ?!

Saturday, December 13, 2008

மீன்...மீன்...மீனோய்...நெய் மீனோய்

நெய் மீன்
வாளை மீன்
விலாங்கு மீன்
வஞ்சிரம் மீன்
இறால் மீன்
சீலா மீன்
சங்கரா மீன்
திருக்கை மீன்
மடவை மீன்
கோலா மீன்
விரால் மீன்
அயிரை மீன்
கெண்டை மீன்
கெளுத்தி மீன்
சுறா மீன்
எனக்குத் தெரிஞ்சது இம்புட்டுத்தேன் ...
அப்பால ...

"வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்.... சென்னாங்குண்ணி கூட்டமெல்லாம் ஊர்கோலம் ..."
பாட்டையும் கூட ரெபெர் பண்ணிப் பாத்துப்புட்டோம் .இந்த ஜாமீன் மட்டும் எங்கன விக்குமுன்னு தெரியலையே .
"விண்மீன் அது வானத்துல நீந்துது
ஜாமீன் எங்கன நீந்துமோ ?! "
ஒண்ணுமில்ல நம்ம வடிவேலு அண்ணாச்சிக்கு ஜாமீனு வேணுமாம் காலைல அல்வா வாசு சன் டி.வி. காமெடி சோவுல சொன்னாரு .அதேன் இங்கிட்டு கேட்டுப் பாக்கலாமேனு வந்துட்டோம்.
இங்கன வாரவுக ஜாமீனு கொண்டுகிட்டு வரலாங்காட்டியும் கருத்து மீனையாச்சும் குத்திட்டு போங்க,

தினம் பல் விளக்குபவர்கள் மட்டும் இதைப் படிங்க இல்லாங்காட்டி போய்க்கினே இருங்க...!!!

தினம் ஆயிரத்து சொச்ச டூத் பேஸ்ட் விளம்பரம் டி.வி ல வருதில்ல...அதப் பார்த்து அதுல வர்ற எதோ ஒரு பேஸ்ட் வாங்கி வீட்ல போட்டுக்கறோம் .இப்ப கேள்வியே ஒரு மாசத்துக்கு நீங்க எத்தினி பேஸ்ட் வாங்கி உங்க பல்ல விளக்கறிங்க? நானும் நிறைய இடத்துல பாத்துபுட்டேன்,
அட என்னா கொடுமைன்னா மாசம் நாலு பேஸ்ட் வாங்கியும் பத்தலையாம் சில வீடுகள்ல?!என்ன தான் பண்றாக ...ஃபேரன் லவ்லிக்கு பதிலா மூஞ்சில தேச்சுக்கறாங்கலோனு பீதியாவுது. இல்லாங்காட்டி டியுப்ள விக்கிற சாக்லேட்டுனு தின்னே தீக்குராங்களோ...? என்ன தான் பண்றாகன்னு research பண்ணிப் பார்த்தாக்க அப்புறம் தெரிஞ்சது சூட்ச்சுமம் !
பேஸ்ட் கம்பெனிக்காரன் விளம்பரம் பார்த்து பேஸ்ட் வாங்கற நம்ம மன்னாரு மொக்கைச் சாமிகள் அதுல இலவசமா தர்ற பிரஷ் நீளத்துக்கு பேஸ்ட்டைப் பிதுக்கி தினம் தேய்க்கிறான் பல்லு .ஆனாலும் நாத்தம் மட்டும் போகல ?!அண்ணன்களே...தம்பிகளே....அக்காக்களே...தங்கச்சிகளே ...பல் விளக்குவான்(அதாங்க பிரஷ்!!!) இருக்குல்ல அதுல சும்மா இத்தனூண்டு பட்டாணி சைஸ் ல பேஸ்ட்டைப் பிதுக்கித் தேச்சா போதும் .பல்லு விளங்கிரும்.இது நான் சொல்லல ...பல் மருத்துவர்கள் சொன்னது.
எல்லாரும் தெரிஞ்சிக்கட்டுமே நு இங்கன கூவினோம்.
அப்புறம் வரட்டுமா...நாளைக்குப் பார்போம்.
எத்தினி பேரு நான் சொன்னத கேட்ருக்காகனு ....

Sunday, December 7, 2008

க்விஸ்...க்விஸ்...க்விஸ்...?!

க்விஸ் ...க்விஸ்...க்விஸ்!!!

அட சுவிஸ் ...இல்லங்க க்விஸ்?!

இப்போ நான் சில கேள்விகள் கேட்பேனாம் ,

அதுக்கு இந்தப் பதிவை யாரெல்லாம் எட்டிப் பார்க்கிராங்களோ அவங்க பதில் போடுவீங்கலாம் பின்னூட்டத்துல.உங்க பொது அறிவை சோதிச்சுப் பர்ர்க்க ஒரு சின்ன வாய்ப்பு தான் ...!!!

போலாமா ரைட்...ரைட் ...ரைட்...

  1. மறைமலை அடிகளாரின் இயற்பெயர் என்ன?
  2. சூரியநாராயண சாஸ்திரிகள் தன் பெயரை எப்படித் தமிழ்ப் படுத்திக் கொண்டார்?
  3. பங்கஜம் இச் சொல்லை எப்படித் தமிழ்ப் படுத்தலாம்?
  4. ரயில் இதன் தூய தமிழ்ப் பெயர் என்ன?
  5. அஞ்சுகம் என்பது எதைக் குறிக்கும்?
  6. வேழம் என்பது எதைக் குறிக்கிறது?
  7. புத்தர் பிறந்த இடம் எது?
  8. தார் பாலைவனம் எங்கு இருக்கிறது ?
  9. பொய்யே சொல்லாத இந்து அரசர் யார்?
  10. கௌடில்யர் எழுதிய நூலின் பெயர் என்ன?

ஓ.கே

இப்போ பதில்களைப் பின்னூட்டத்தில சொல்லிட்டிங்கனா உங்களுக்கு மதிப்பெண் கொடுக்க வசதியா இருக்கும் .

நான் ரெடி ...நீங்க ரெடியா ?

Saturday, December 6, 2008

பெண் மலர் தான் மலிவல்ல...?!

பெண் மலர் தான் மலிவல்ல...
சில்லறை வண்டுகள் ரீங்காரமிடும்போது ,
சில்லிட்டு உறையாமல்
சிக்காமல் மீண்டு எழுந்தால் ;
பெண் மலர் தான் மலிவல்ல...!
ஆப்பிள் தேவதைகள் தான் ...
அழுகிப் போகாமல் காக்கும் வரை ;
சாக்லேட் தேவதைகள் தான் ...
சாக்கடையில் நழுவாமல்
தன்னைத் தானே காக்கும் வரை;
பெண் மலர் தான் மலிவல்ல!
ஆதாமின் முதுகெலும்பு ஏவாள் என்றால்...
ஏவல்களில் தேய்ந்து போன
பெண்ணியத்தின் முதுகெலும்பில்
விரிசல்களை எண்ணக்கூட
வராதொழிக்கும் ஆதாமை
சட்டை செய்யாது
விட்டு விடுதலையாகி
சிட்டுப் போல் சிறகு விரித்து
பறந்து திரிந்து
ஊரில் பல
பாரில் பல
கற்றுத் தெளிந்தாளானால்
பெண் மலர் தான் மலிவல்ல!
நாசாவில் ஏறி விண்வெளிக்குப் போனவள்
கல்பனா சாவ்லா ;
நாளுக்கு நாள்
தெருவுக்குத் தெரு ,
புறம் பேசியே
நாசமாகிப் போனவள்
எதிர் வீட்டுக் கமலா ...
அவளும் பெண்ணே!
இவளும் பெண்ணே!
தன்னைத் தானுணர்ந்து
வாழும் வகை புரிந்து விடின்
பெண் மலர் தான் மலிவல்ல!
சந்தோசம் சில நேரம்...
சங்கடங்கள் பல நேரம் ,
எல்லாம் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்...!!!
பெண்ணுக்குப் பெண்ணே எதிராகி
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொழுத்துவோம் ;
பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தும் முன்னே
நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வை
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நீர்மை
தனக்குத் தானே
உறுவேற்றிக் கொண்டு
மனதில் உறுதி கொள்
வாக்கினிலே தெளிவு கொள்
பெண்ணே நீ
மலர் தான் மலிவல்ல என்றுமே!!!

(இது நான் காலேஜில் படிக்கும் போது கலந்து கொண்டு ஒரு இன்டர் காலேஜ் கவிதைப் போட்டியில் எழுதி முதல் பரிசு பெற்ற கவிதை ,வரிகளில் பல ஞாபகமில்லை ,நினைவில் நின்ற வரிகளை வைத்து ஒப்பேற்றி இருக்கிறேன் .அந்த ஒரிஜினல் கவிதை இன்னும் அர்த்தம் நிறைந்த அருமையான வரிகளுடன் இருந்ததை ஞாபகம் .இப்போதாவது சில வரிகளேனும் மறக்காமல் இருக்கிறது...இன்னும் கொஞ்ச நாள் போனாள் எல்லாமே மறந்து விடுமோ என்னவோ என்று தான் இதைப் பதிவிட்டேன் .படிப்பவர்கள் தங்களது கருத்துகளைச் சொன்னால் தேவலை !!! )



Wednesday, December 3, 2008

தாம்பத்யக் கூத்து

தெர்மாக்கோல்

அட்டை மேல்

சிக்கலின்றி

ஊடுருவிச் செல்லும்

சூடான கத்தி போல

என்னுள்ளே

ஊடுருவ

எப்படியோ

உன்னை நான்

அனுமதித்தேன்

என் சொல்கிறாய்...

என் கணவா?

முயலாமை

எல்லா

சமாதானங்களின்

முதுகின் மேலும்

சுமக்க

முடியாமல்

தொக்கி

நிற்கும்

இயலாமைகள்

முயலாமைகளோ?!

Tuesday, December 2, 2008

கதை கதையாம் காரணமாம்...(கதை சொல்லிகள்)

நான் ஐந்து ஆறாம் வகுப்புகளில் படிக்கும்போதெல்லாம் எங்கள் ஊரில் ஒவ்வொரு தெருவிலும் வாசலில் திண்ணை வைத்துக் கட்டப் பட்ட வீடுகளே அதிகம் இருந்தன.

திண்ணைகள் பெரும்பாலும் வேறு எதற்குப் பயன்பட்டதோ என்னவோ சாயந்திரம் ஆறு மணியானால் கதை கேட்கக் கூடும் சின்னப் பிள்ளைகளுக்கு அது ஒரு பட்டறை மாதிரி தான் !!!

தெருவுக்குத் தெரு இப்படிப் பட்ட கதை சொல்லிக் களங்கள் அந்த நாட்களில் எங்கள் ஊரில் நான்கைந்து இருந்தன ,சுமார் முன்னூறு வீடுகளில் எண்ணி ஐம்பது அல்லது அறுபது சிறுவர் சிறுமிகள் அப்போது இருந்தோம் என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு கதை சொல்லிக் களத்திலும்(திண்ணை தான்!!!) பத்துப் பதினைந்து பேராக சேர்ந்து உட்கார்ந்து கதை கேட்டிருப்போம் என்று நினைக்கிறேன்.

இப்போது நினைத்துப் பார்த்தால் அது ஒரு கோலாகலம் தான்!!! ஆறுமணிக்குக் கதை கேட்க மதியம் சாப்பாடுப் பீரியட் முடிந்ததிலிருந்தே நேரத்தைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே இருப்போம் .அது வேறு சதி செய்யும்! அப்போது பார்த்து சீகிரமே கடைசி பெல் அடிக்கும் நேரம் வரவே வராது...அது பாட்டுக்கு மந்தமாக நேரம் போவதைப் போல் இருக்கும்.

எப்போதடா சாயந்திரம் ஆகும்?

எப்போதடா பள்ளியில் கடைசி பெல் அடிப்பார்கள் ?

எப்போதடா வீட்டுக்குப் போய் புத்தகப் பையை வீசி விட்டு ஒரு பேருக்கு கையைக் காலைக் கழுவிக் கொண்டு எதையோ கொறித்து விட்டு கூட்டாளிகளுடன் வீதிக்கு ஓடுவோம் என்று இருக்கும்!!!

வீதியில் இறங்குவதோடு முடிந்து விடுமா என்ன?

இன்றைக்கு எந்தத் திண்ணையில் கதை சொல்பவர்கள் உட்காருவார்கள் என்றும் தெரிந்து கொள்ள வேண்டுமே?

பொதுவாக அப்போதெல்லாம் அவரவர் அப்பா ...அம்மாக்களை விட கதை சொல்வதற்கென்றே ஒரு சில தாத்தா பாட்டிகள் இருப்பார்கள் ஊர் ஊருக்கு!!அல்லது கல்யாணத்திற்கு காத்திருக்கும் ஒரு சில அக்காக்கள் இருப்பார்கள்!!!அதுவும் இல்லையெனில் கண்டிப்பாக ஒரு பெரிய பையன் அல்லது பெரிய பெண் இருப்பாள்

(பெரிய பையன்..பெரிய பெண் என்றால் வேறு ஒன்றும் இல்லை அவர்கள் எங்களை விட கொஞ்சமே கொஞ்சம் (ஒரு மூன்று அல்லது நான்கு வயது மூத்த பெண் அல்லது பையன்) பெரியவர்கள் ஆனால் இப்படிக் கதை கேட்பதில் சீனியர்கள்!!! அவ்வளவே?!

எங்கள் ஊரில் ,அந்தமான் தாத்தா வீட்டுத் திண்ணை தான் ரொம்ப பேமஸ் கதை கேட்க நாங்கள் கூடும் இடங்களில் அது தான் டாப் .அங்கே தான் பேமஸ் கதை சொல்லிகள் "சரசக்கா ...சீரங்கபுரம் முருகன் ,ஜோதி அத்தை...கறுப்பி மீனாச்சி இவர்களெல்லாரும் ஆஜர் ஆவார்கள் .

இவர்களில் ...

சரசக்கா மாயாஜாலக் கதைகள் சொல்வதில் தேர்ந்தவள் ,அவள் கதை சொல்லிக் கொண்டிருக்கும் பொது சில நேரம் நமக்கே பயம் வந்து விடும் "எங்கே எந்த மந்திரவாதி வந்து நம்மைத் தூக்கிக்கொண்டு போய் விடுவானோ என்று?)"நான் உத்தம பத்தினி என்றால் ஏய் தொடையே நீ இரண்டாகப் பிளந்து இந்த மீன் முள்ளை எல்லாம் யார்கண்ணுக்கும் தெரியாமல் மறைத்து விடு "என்று குத்துவிளக்கு(கதை நாயகி ) தன் இறந்து போன தாயை நினைத்துக் கொண்டு ஆணையிட்டால் அவளது தொடை இரண்டாகப் பிளந்து அவள் சொன்னதை செய்யும்...சரசக்கா இதை நமக்கு கண்கூடாகப் பார்க்க வைப்பது போலவே சன்னதம் வந்து பேசுபவர்கள் போல கதை சொல்வாள் .

சரசக்கா இப்போது எங்கிருக்கிறாளோ ? அவள் சொன்ன கதை மட்டும் நெஞ்சோடு நீங்காமல்!!!

முருகன் சொல்லும் கதைகள் பெரும்பாலும் ஹீரோ ...கொள்ளைக் கூட்டம் ..இந்த வகையறாக்கள் தான் .கண்டிப்பாக கடைசியில் ஹீரோ கொள்ளைக் கூட்டத்தை ஜெயித்து ஊர் மக்களைக் காப்பாற்றுவார் .ஒரே ஒரு கதையை முடிக்க அவனுக்கு பத்துப் பதினைந்து நாட்கள் கூட ஆகும்(பாதர் ஆப் மெகா சீரியல் வேர்ல்ட் என்று அவனுக்குப் பட்டம் கொடுத்தால் கூட தவறே இல்லை).

T.v (TELEVISION)கூடப் பிரபலமில்லாத அந்தக் காலத்தில் அவன் எங்களுக்கு இடையில் உணவு இடைவேளை எல்லாம் கூட விட்டுக் கதை சொன்னான் என்றால் மெகா சீரியல் தந்தை என்ற பட்டம் தரலாம் தானே?

ஜோதி அத்தை நிறைய சாமிக் கதைகள் சொல்லுவார்.ஆயிரம் கண் மாரியம்மாள் கதை,நீலி கதை...கருப்ப சாமி வேட்டைக்குப் போகும் கதை...அய்யனார் கதை...இப்படி நிறைய!

கருப்பு மீனாச்சிக்கு எம்.ஜி.ஆர் என்றால் கொள்ளைப் பிரியம் .அவளது கதைகளில் எல்லாம் எம்.ஜி.ஆர் தான் ஹீரோ ...வில்லன் பெரும்பாலும் அசோகன் தான்(நம்பியாரை அவளுக்குப் பிடிக்காதோ என்று எங்களுக்கெல்லாம் சந்தேகம்) அப்போது அவளிடம் இதைக் கேட்கவில்லை இப்போது அவள் எங்கிருக்கிறாளோ?

கதை சொல்லிகள் என்று தனியாக ஆட்களைத் தேடாமல் எங்களுக்குள் வாழ்ந்து இன்று எங்கேயோ இருந்தாலும் அவர்கள் எல்லோரையும் எதோ சில சமயங்களில் நினைக்க வைப்பது அவர்கள் சொன்ன கதைகள் தானே!!!

ஞாபகம் வந்ததால் இதைப் பதிந்தேன் .

Monday, December 1, 2008

அப்படிப் போடுங்க கலைஞரே!!!

கலைஞரை விட சிறந்த ஒரு ராஜதந்திரியை எங்கு தேடினாலும் கிடைப்பது அரிதே.தேர்தல் நெருக்கத்தில் முட்டிக் கொண்டு நின்ற எல்லோரையுமே ஏதோ ஒரு வகையில் சாந்தப் படுத்தி நிலைமையை தனக்குச் சாதகமாக மாற்றி விட்டாரே!!!.
மாறன் பிரதர்ஸ்...மதுரை அழகிரி பிரச்சினை இப்போதைக்கு முடியாது என்று தான் பொது மக்கள் நினைத்திருக்கக் கூடும்,இதோ இன்றென்னவோ ஒன்று சேர்ந்து விட்டதைப் போல ஒரு காட்சி பிழையை உண்டாக்கி இருக்கிறார்கள்!பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இவர்களது ஒற்றுமையை .
காடு வெட்டி குருவை விடுதலை செய்து ராமதாசையும் கூல் பண்ணி விட்டார்,குரு எதற்கு கைது செய்யப் பட்டார்? கலைஞரை திட்டியதற்கா அல்லது தேசியப் பாதுகாப்பிற்கு ஊரு விளைவிக்கும் வண்ணம் தனி மனித நிந்தனையும்,மிரட்டலும் விடுத்ததர்க்கா?அதுவே இன்னும் புரிந்த பாடில்லை.
அதற்குள் கூட்டணியில் இருந்து பா.ம.கா விலகல்...ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் பத்திரிகைகளில் சாடல் எல்லாம் முடிந்து இலங்கைப் பிரச்சினை வந்தது,அது முடியவில்லை ...அதற்குள் வை.கோ கைது .seeman,அமீர் கைது என்று பிரச்சினை திசை திரும்பியது .
யார் யாரெல்லாமோ புதுக் கட்சி ஆரம்பிக்கப் போகிறார்கள் எனும் காமெடி ஹாஸ்யம் உலா வந்தது.
இது அந்த இயற்கைக்கே பொறுக்கவில்லையோ என்னவோ?கடந்த ஒரு வாரமாக பேய் மழையாகக் கொட்டி முழக்கி விட்டு பெரும் களேபரத்தை உண்டாக்கி ஓயும் முன் மும்பையில் குண்டு வைத்தார்கள் சில மூட மிருகங்கள்,"இந்தியன் தானே எல்லாம் தாங்குவான் "என்று இயற்கையும் ஒரு கணக்கு வைத்திருக்குமோ என்னவோ?ஏதோ இன்றைக்கு காலையில் தான் ஒனால் போகிறதென்று வானம் சூரியனை கொஞ்சம் வெளியில் காட்டியது.அப்பாடா என்று ஆசுவாசமாய் மூச்சு விட்டுக் கொண்டு நிமிர்வதற்குள் ;
மாறன் அழகிரி சந்திப்பு,கலைஞர் மாறன் சந்திப்பு என்று ஊடகங்கள் பல்லாண்டு பாடுகின்றன.எது எப்படியோ?எத்தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கலைஞர் வீட்டு குடும்பச் சண்டை மாகாத்மியங்களையும் கேட்டே ஆகா வேண்டிய கட்டாய சூழ்நிலை தன்மானத் தமிழனுக்கு இன்று வந்து விட்டது .பத்திரிக்கை முதற்கொண்டு...டி.வி வரை ஊடகங்களின் துணை கொண்டு அவர்கள் என்னவோ ஜனநாயகம் என்ற பெயரில் இங்கே நவீன மன்னராட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் வாரிசு அடிப்படையில் பதவிகளை அனுபவித்துக் கொண்டு இன்னும் நீண்ட காலம் நல்லாட்சி தருவார்கள் .
நம்பிக்கையில் நான்காம் நிலைத் தொண்டன் போஸ்டர் ஒட்டட்டும் .
நாமெல்லாம் வேடிக்கை பார்ப்போம்!!!
வேறு என்ன கிழித்து விட முடியும் நம்மால் இதைத் தவிர?!